நாசரேத், ஜூன் 19: நாசரேத் ரயில் நிலையம் எதிரே அமைக்கப்பட்ட அடிபம்பு, மருந்துக்குக்கூட பராமரிக்கப்படாததால் செயல்படாத நிலையில் காட்சிபொருளாக மாறிவிட்டது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இதன் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் சென்று வருகிறார்கள். இந்த அடிபம்பு செயல்படும் நேரத்தில் இப்பகுதி மக்களுக்கு பிரயோஜனமாக காணப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அடிபம்பு பராமரிப்பின்றி செயல்படாத நிலையில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ராபின் கூறுகையில், ‘‘அடிபம்பை சீர்செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பலனும் இல்லாத நிலையில் உள்ளன’’ என்றார். எனவே இதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பல மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ள அடிபம்பை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.