ஊட்டி, ஜூன் 19: ஊட்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.
ஊட்டி வட்டத்தில் நேற்று ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நேற்று துவங்கியது. இதற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன் தலைமை வகித்தார். இந்த ஜமாபந்தியில் முதல் நாளான நேற்று தூனேரி உள்வட்டத்திற்குட்பட்ட தும்மனட்டி, எப்பநாடு, கக்குச்சி, கூக்கல், தூனேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வரிசையில் காத்திருந்து மனுக்கள் அளித்தனர். நேற்று நடந்த ஜமாபந்தி பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, பயிர் கடன், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதில் தகுதியான மனுக்கள் மீது உரிய தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பல்வேறு துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குந்தா தாலுகாவில் ஊட்டி ஆர்.டி.ஒ., சுரேஷ் தலைமையிலும், கோத்தகிரி தாலுகாவில் உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையிலும், கூடலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமையிலும் நடந்தது. குன்னூர், பந்தலூர் தாலுகாகளிலும் ஜமாபந்தி நடந்தது. இதேபோல் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாகளில் ஜமாபந்தி நடக்கிறது.பந்தலூர்: பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் எம்.எல்.ஏ., திராவிடமணி முன்னிலை வகித்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இந்த வருவாய் தீர்வாயம் மற்றும் மக்கள் தொடர்பு முகாமில் சேரங்கோடு 1,2 கிராமத்திற்கு நேற்றும், நெல்லியாளம் 1,2 கிராமத்திற்கு இன்றும் ஜமாபந்தி நடக்கிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஊனமுற்றோர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை, விவசாயிகளுக்கு உதவித்தொகை என 21 பயனாளிகளுக்கு உடனடியாக உதவி வழங்கப்பட்டது. மேலும் இலவச வீட்டுமனை, முதியோர் பென்சன், இலவச வீடு, கழிப்பிட வசதி, வீடுகளுக்கு மின் இணைப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 170 மனுக்கள் பெறப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் காமு, சாந்தி உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று நெல்லியாளம் கிராமத்திற்கு ஜமாபந்தி நடக்கிறது.