×

ராட்சத குழாய் வால்வு உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

ஈரோடு, ஜூன் 19:  ஈரோட்டில் குடிநீர் விநியோக ராட்சத குழாயின் வால்வு உடைந்ததால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வஉசி பார்க்கில் குடிநீர் விநியோகத்திறகாக மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் தேக்கப்பட்டு, ஈரோடு நகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், 11 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கக்கூடிய ஒரு மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்வதற்காக சாலையின் நடுவில் உள்ள ராட்சத குழாயின் வால்வினை திறக்க மாநகராட்சி ஊழியர் ஒருவர் முயன்றார். அப்போது, வால்வு உடைந்ததால், தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறியது. அந்த ஊழியர் எவ்வளவோ முயன்றும் வெளியேறும் தண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மேல்நிலை தண்ணீர் தொட்டியில் தேக்கி வைத்திருந்த 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறி ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், நகர் பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் செய்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,`நகர் பகுதிக்கு விநியோகிக்கும் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் டேங்கின் வால்வு ஆகும். இந்த வால்வு திறந்து விடும்போது, ஸ்டாக் ஆகி உடைந்ததால் தண்ணீர் வெளியேறி வருகிறது. ஊழியர்கள் மற்றும் பிட்டர்கள் வரவழைக்கப்பட்டு இது உடனடியாக சரிசெய்யப்படும்’ என்றார்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...