×

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

ஊட்டி, ஜூன் 19:  முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய சான்றுகளுடன் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மற்றும் திட்டம் 2ன் கீழ் ரூ.26 ஆயிரம் பெற குடும்ப ஆண்டு வருமானம் தாயின் பெயரில் பெறப்பட வேண்டும். அதிகபட்ச வருமானம் ரூ.72 ஆயிரமாக இருத்தல் வேண்டும். இருப்பிடச் சான்று தாயின் பெயரில் பெறப்பட்ட வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுக்கு பெறப்பட வேண்டும். ஆண் வாரிசு இல்லை எனச்சான்று பெறப்பட வேண்டும். இச்சான்று அனைத்தும் தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும். தாய் மற்றும் தந்தையின் வயது சான்று (மதிப்பெண் சான்று அல்லது மாற்றுச் சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடமிருந்து வயது சான்று) சமர்ப்பிக்கப்பட வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றுகள் பெயருடன் சமர்ப்பிக்க வேண்டும். தாய் மற்றும் தந்தையின் சாதிச்சான்றுகள் பெயருடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  மேலும் தாயின் வயது அறுவை சிகிச்சையின் போது 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குடும்ப புகைப்படம் , பெற்றோரின் திருமண பத்திரிக்கை சமர்பிக்க வேண்டும். முதல் குழந்தை மட்டும் இருந்தால் முதல் குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள்ளும், இரண்டு குழந்தை இருந்தால் இரண்டாவது குழந்தை பிறந்து 3 வருடத்திற்குள்ளும் இந்த அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். தாய் இல்லை எனில் தாயின் இறப்புச் சான்றுடன், இந்த சான்றுகள் அனைத்தும் தந்தையின் பெயரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகம், பிங்கர்போஸ்ட், ஊட்டி, 643006 மற்றும் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களை நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு இன்னசெனட் திவ்யா கூறியுள்ளார்.

Tags : Rs ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...