விருதுநகர், ஜூன் 18: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி, டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 167 அரசு மருத்துவர்களில் 25 மருத்துவர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. பணியாற்றிய 142 பேரும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். இருப்பினும் வெளிநோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிக்சை பிரிவிற்கு வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 49 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 75 டாக்டர்களில் 65 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், அவசர சிகிச்சை அளிக்கப்பட்டன.