தேனி, ஜூன். 18: தேனி உழவர் சந்தை அருகே சாலையோரம் கடை நடத்துவோர் சங்கத்தினர் நேற்று கலெக்டரிடம் கேரிக்கை மனு அளித்தனர்.
தேனி உழவர் சந்தை அருகே சாலையோரம் கடை நடத்தும் சிறு வியாபாரிகள் சங்கத்தினர் நாகராஜ் தலைமையில் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: தேனி உழவர் சந்தை அருகே சாலையோரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது உழவர் சந்தை நிர்வாகிகள் எங்களை உழவர் சந்தை வரும் வழியில் கடை நடத்தக்கூடாது எனச் சொல்லி உழவர் சந்தைக்கு மேற்குப்புறம் உள்ள செப்டிக்டேங்க், கழிவுநீர் வாய்க்கால் உள்ள அசுத்தமான இடத்தில் கடைகளை நடத்த வேண்டும் என வற்புறுத்தினர்.
நாங்களும் அந்த பகுதியில் கடைகளை அமைத்தோம். சுத்தமில்லாமலும், சுகாதாரக் கேடாகவும் இப்பகுதி உள்ளதால் காய்கறி வாங்க பொதுமக்கள் யாரும் இப்பகுதிக்கு வருவதில்லை. இதனால் சாலையோர கடைவியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு, வழக்கம்போல சாலையோர வியாபாரிகள் நடத்தி வந்த பழைய இடத்திலேயே கடைகள் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.