×

போலீஸ் ஏட்டுவை தாக்கிய தமமுக பிரமுகர் கைது

திண்டுக்கல், ஜூன் 18: திண்டுக்கல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு தாக்கப்பட்ட வழக்கில் தமமுக பிரமுகர் மற்றும் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு போலீஸ் எஸ்ஐ தயாநிதி தலைமையில் ஏட்டு ஈஸ்வரன் உட்பட பலர் தாடிக்கொம்பு பஸ் நிறுத்தம் அருகே கடந்த 14ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் பரமன்(45) ஹெல்மெட் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் பைக் ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.இது குறித்து பரமன் தனது மகன் ஜீவராஜ் பிரியனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். ஜீவராஜ் பிரியன், பாலக்கோட்டை சேர்ந்த டிரைவர் நாகராஜூடன் காரில் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் ஜீவராஜ் பிரியன், பரமன், நாகராஜ் ஆகியோர் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்ட ஏட்டு ஈஸ்வரனை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து எஸ்ஐ தயாநிதி, போலீசார் விரைந்து சென்று ஏட்டு ஈஸ்வரனை காப்பாற்றினர். ஜீவராஜ் பிரினை கைது செய்தனர். பரமன், டிரைவர் நாகராஜ் ஆகியோர் காரில் ஏறி தப்பி சென்றனர்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் பரமனையும், டிரைவர் நாகராஜையும் நேற்று கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பரமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : Dhammukku ,
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு