×

உப்பிலியபுரம் அருகே சாலையை சீரமைக்ககோரி மக்கள் சாலைமறியல்

துறையூர், ஜூன் 18: உப்பிலியபுரம் அருகேயுள்ள ஒ.கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சாலையை சீரமைக்ககோரி துறையூர்-தம்மம்பட்டி சாலையில் உள்ள கைகாட்டியில் சாலை மறியல் செய்தனர்.துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஒ.கிருஷ்ணாபுரம் பிரிவு ரோட்டிலிருந்து கிராமம் வரை உள்ள சாலை மிகவும் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாலையை செப்பனிடுவதற்காக பழைய தார்சாலையை பறித்து ஜல்லி பரப்பி மண்போட்டு செப்பனிடப்பட்டது. ஆனால் தார் ஊற்றவில்லை. தார் போடுவதாக கூறிய அதிகாரிகள் ஒரு வருடமாகியும் சரிசெய்யவில்லை. இதனால் தற்போது ஜல்லி ரோடும் பெயர்ந்து சாலை குண்டு, குழியுமாக இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாதபடி மோசமாக மாறிவிட்டது. இதனை பொதுமக்கள் பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை.

இதனால், பொதுமக்கள் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளருமான முத்துச்செல்வன் தலைமையில் ஏராளமானோர் திரண்டு வந்து துறையூர்- தம்மம்பட்டி சாலையில் ஒ.கிருஷ்ணாபுரம் பிரிவு ரோட்டில் இருசக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உப்பிலியபுரம் ஒன்றிய ஆணையர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் உறுதியளித்ததன்பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணிநேரம் துறையூர்- தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags : Roadside road ,road ,Uppiliyapuram ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...