திருச்செங்கோடு, ஜூன் 18: கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் நேற்று டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்று முடிவெடுத்து 24 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில், புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் மூடப்பட்டன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள், இந்திய மருத்துவ சங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
அரசு மருத்துவ சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் அருள் கூறுகையில், ‘ திருச்செங்கோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தில் 105 டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவர்களாக உள்ளனர். இந்திய மருத்துவ சங்கத்திற்கு ஆதரவாக, நாங்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்கிறோம். மத்திய, மாநில அரசுகள் டாக்டர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் பணி பாதுகாப்பு வழங்கும் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்,’ என்றார்.