பரமத்திவேலூர், ஜூன் 18: பரமத்தியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகசெல்வராசன், துணைச்செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மலர்விழி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சேகர் செயற்குழு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில், நடப்பு கல்வியாண்டின் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க வேண்டும். பரமத்தி ஒன்றியத்தில் பணி வரன்முறை கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு, ஆணைகள் விரைந்து வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியர்கள் துரைசாமி, அமிர்தவல்லி, மாலதி, அன்பரசி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் பத்மாவதி நன்றி கூறினார்.