சிதம்பரம், ஜூன். 18: துறவற நிலையில் அவதூத சுவாமிகள் சிதம்பரத்தில் தவமிருந்து பல அற்புதங்களை நிகழ்த்தியபோது அங்கேயே பரிபூரமடைந்தார். அவருக்கு சிதம்பரம் குருவையர் தெருவில் அதிஷ்டானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிஷ்டானத்தில் வழிபட்டால் திருமண தடை நீங்கும், புத்திர பாக்கியம் உண்டாகும் என பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடையே நிலவி வருவதால் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். அதிஷ்டானத்தில் வரும் 23ம்தேதி 54வது வருட குரு பூஜை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி குரு பிரார்த்தனை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது. குருபூஜை விழாவில் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். பூஜைகளை சங்கரநடராஜ தீட்சிதர் குழுவினர் செய்கின்றனர். பின்னர் அதிஷ்டானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அதிஷ்டான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.