புதுக்கோட்டை, ஜூன் 18: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம், கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். அரசாணைப்படி ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு மாத ஊதியம் ரூ.11 ஆயிரத்து 236-ம், துப்பரவு தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.9 ஆயிரத்து 934-ம் மற்றும் நிலுவை தொகையையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முகமதலிஜின்னா உள்பட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டனர்.