தூத்துக்குடி, ஜூன் 18: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கிராம மக்கள் 122 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பெண் தொழில் முனைவோர்களுக்கான நிதியுதவி, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதோடு மக்கள் நலன்கருதி சிறப்பு மருத்துவ முகாம், ரத்த தான முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முத்துசரம் - தாமிர சுரபி திட்டத்தில் அக்கிராமங்களுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்து வருகிறது. இதேபோல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே தூத்துக்குடி பகுதியை சுற்றி சிறுதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் நிறுவனம் கிராம மக்கள் 122 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட இஸ்திரி தொழிலாளர்கள் சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பண்டாரம்பட்டி கிராம சமுதாய தலைவர்கள் செல்லப்பாண்டியன், ஹரிகிருஷ்ணன், மீளவிட்டான் கிராமத் தலைவர்கள் முத்துராஜ், பழனிகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தனவேல், ராதாகிருஷ்ணன், சர்வேசன், குமரவேந்தன், விமல்ராஜ் வாழ்த்திப் பேசினர். இதில் தூத்துக்குடி சுற்றுவட்டார தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.