×

கழிவுநீரால் மாசடையும் வீரகேரளம்புதூர் கால்வாய்

நெல்லை, ஜூன் 18: வீரகேரளம்புதூர் கால்வாய் குப்பை மற்றும் சாக்கடையால் மாசுபடுவதாக கூறி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு தலைவர் பால் அண்ணாத்துரை, செயலாளர் ஆபிரகாம் டேனியல், பொருளாளர் சுரேஷ்ராஜா, வக்கீல் முத்துப்பாண்டி, சக்திகுமார், அருணகிரி மற்றும் வீ.கே.புதூர் பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: வீரகேரளம்புதூர் கால்வாய் பல நூற்றாண்டுகளை கடந்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், குளிப்பதற்கும், வெற்றிலை பதனிடுதல் உள்ளிட்ட தேவைகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இக்குளம் வீராணம் குளத்தை அடைந்து அங்கு சுற்றியுள்ள கிராமங்களில் 500 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் தருகிறது.

இக்கால்வாய் இன்று குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், கடைக்கழிவுகள், சாக்கடை நீர் கலந்து மாசுபட்டுள்ளது. மாசுபட்ட தண்ணீர் நிலத்தடி நீரையும் அசுத்தமாக்கி வருகிறது. எனவே வீ.கே.புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குப்பைகளையும், சாக்கடை நீர் வடிகாலையும் முறைப்படுத்தி கால்வாயை காப்பாற்ற வேண்டும். அரண்மனையின் உள்பகுதி வெளியே எவ்வித தடங்கலும் இன்றி வெளியே வரும் இந்த அழகிய கால்வாயை மீட்டு வரலாற்று சின்னத்தை காத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED டிராக்டர் கலப்பையை திருடிய வாலிபர் கைது