விருதுநகர், ஜூன் 14: மத்திய அரசின் திட்டமான 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 24.2.19 முதல் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி, நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே உயர் வருவாய் பிரிவினர், நிறுவனங்கள் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதி உள்ள அனைத்து விவசாயிகளும் விஏஓக்களிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
1.2.2019க்கு முன்பே பட்டாதாரர் இறந்திருந்தாலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து வாரிசுதாரர்களும் திட்டத்தில் சேரலாம். இறந்த தாய், தந்தை பெயரில் நிலம் இருந்தாலும் வாரிசுதாரர்கள் சம்பந்தப்பட்ட தாசில்தாரை அணுகி விண்ணப்பம் அளித்து 30.6.19க்குள் பட்டா மாறுதல் செய்து அதன் அடிப்படையில் நிதி பெறலாம். தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியை பயன்படுத்தி விவசாயிகள் பட்டா மாறுதல் செய்யலாம் என கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.