திருவில்லிபுத்தூர், ஜூன் 14: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத்திற்கு நாள் செய்யும் விழா நேற்று நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம், ஆண்டாள் பிறந்த தினமான பூர நட்சத்திர தினத்தன்று வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, ஆண்டாள் பிறந்த தினமான பூர நட்சத்திரம் ஆகஸ்ட் 4ம் தேதி வருகிறது. இதையொட்டி அன்று ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.
இதற்காக தேருக்கு நாள் செய்யும் விழா நேற்று அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் நடந்தது. அர்ச்சகர் ரகு பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். சிறப்பு பூஜையில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் உட்பட கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
இதுகுறித்து ஆண்டாள் கோயில் பணியாளர்கள் கூறுகையில், ‘தேருக்கு நாள் செய்ததால் தேரை அலங்கரிக்கும் பணி மற்றும் ஆடிப்பூர கொட்டகையில் அலங்கார பணி விரைவில் துவங்கும்’ என்றனர்.