சாயல்குடி, ஜூன் 14: கடலாடி அருகே மீனங்குடியில் பிரசித்தி பெற்ற சுயம்பு வடிவிலான கல்லடி பெருமாள்கோயில் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி மாதம் களரி திருவிழா கொண்டாடுவது வழக்கம். சாதி, மதம் பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் இணைந்து இத்திருவிழாவை சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் மற்றும் கணபதி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கியது. மதுரை அழகர்மலையிலுள்ள அழகர்கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தத்துடன் தீர்த்தவாரி நடந்தது. ஒரு வாரக்காலம் கடலாடி, மீனங்குடி, நரசிங்கக் கூட்டம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் திரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் இரவில் கல்லடிபெருமாளுக்கு பலவகையான சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடத்தப்பட்டு கடம் ஆசி வழங்கப்பட்டது. நள்ளிரவு கருப்பசாமிக்கு காவு கொடுத்தல், வேட்டைக்கு செல்லுதல், சாமி ஆடுதல், பேய் விரட்டுதல், 108 சாட்டையடி அடிக்கும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது.