நாகை,ஜூன்14: பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 எக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவியானது 4மாத காலத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் தற்பொழுது சிறு, குறு, நடுத்தர, பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. எனவே உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் சேர விஏஓவிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறவும். மேலும் பிப்ரவரி மாதம் 1ம் தேதிக்கு முன் இறந்த பட்டாதாரர்களின் வாரிசுகளுக்கு வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதிக்கு முன் இறந்த தனது பெற்றோர் பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர்கள் சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி விண்ணப்பித்து வரும் 30ம் தேதிக்குள் பட்டா மாறுதல் பெற்று பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு நாகை மாவட்டத்தில் நடந்து வரும் ஜமாபந்தியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.