×

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய கலெக்டர்களுக்கு விருது

சென்னை, ஜூன் 14:  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார். திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 473 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.2 கோடியே 5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக 2018ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், முன்னாள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி வழங்கி கவுரவித்தார். மேலும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கான 2018ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளையும், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கான 2018ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளையும், மக்கும் கழிவிலிருந்து உரம் அல்லது மீத்தேன் எரிவாயு தயாரித்தல், மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அனுப்புதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துதல், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றியதற்காக 2018ம்  ஆண்டிற்கான பசுமை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையாணையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த மண்டல ஒருங்கிணைப்பாளர்களான உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை ஆணையர் அமுதா, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோருக்கு முதல்வர் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கருப்பணன், பெஞ்சமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : collectors ,
× RELATED நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை