கம்பம், ஜூன் 13: கூடலூர் அருகே வாலிபரை கொன்று புதைத்த சம்பவத்தில், மேலும் சில குற்றவாளிகளை கைது செய்யவில்லை என கூறி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உறவினர்கள் சாலைமறியல் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மனோஜ்குமார்(24) என்ற வாலிபரை அவரது நண்பர்களான கருநாக்கமுத்தன்பட்டி மெயின்ரோட்டைச்சேர்ந்த அஜித்குமார்(23), பேச்சியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார்(23) இருவரும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கொலை செய்து புதைத்த வழக்கில் கூடலூர் போலீசார் கைது செய்தனர்.
மனோஜ்குமார் கொலை சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம். எனவே அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கொலை செய்யப்பட்ட வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபடுபவதற்காக நேற்று வேன் மூலம் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த உத்தமபாளையம் டிஎஸ்பி வீரபாண்டி தலைமையில் போலீசார் கம்பம் இரட்டை குழாய் சின்னவாய்க்கால் பகுதி அருகே அவர்களை மறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் மறியலில் ஈடுபடுவதை கைவிட்டு திரும்பி சென்றனர்.