ராமநாதபுரம், ஜூன் 13: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் உத்தரவுபடி மாநிலம் முழுவதும் விபத்து பாதுகாப்பு ஒத்திகை செய்முறை நடத்தப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி ஆகிய ஊர்களில் பள்ளி மாணவர்களுக்கு ஒத்திகை நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து நடைபெற்றால் தப்பித்துக் கொள்ளுவது எப்படி, தீ விபத்துகளை தடுக்கும் முறைகள், தீ விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல், வெள்ளம் பூகம்பம், கூட்ட நெரிசல் மற்றும் இயற்கை சீற்றங்களிருந்து உயிர்களையும், உடைமைகளையும் தற்காத்து கொள்ளுவது எப்படி போன்ற விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ், தலைமையில் ராமநாதபுரம் நிலைய அலுவலர் அருளானந்த், ராஜேந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் ஒத்திகைகளை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் துளசிராம், மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.