மதுரை, ஜூன் 13: இலவச மின்இணைப்பு கோரி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கரும்பு விவசாயிகள் நிர்வாக கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மதுரை மாவட்ட தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் நிர்வாக கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை வகிக்க, செயலாளர் அய்யாக்காளை, நிர்வாகி மொக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில கரும்பு அரவை நிலுவைத் தொகை ரூ.19 கோடி பாக்கி உள்ளது. அதனை உடனே வழங்க வேண்டும். விவசாயிகள் தேசிய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில், ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் திட்டத்தின்படி கடந்த ஓராண்டாக மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. உடனே அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 20ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரும்பு விவசாயிகள் முடிவு