×

கொடைக்கானலில் வீட்டை உடைத்து 7 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கொடைக்கானல், ஜூன் 13: கொடைக்கானலில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கொடைக்கானல் அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்த அப்துல் ரஜாக் மகன் முஜிபூர் ரகுமான். இவர் இப்பகுதியில் வசித்து வருகிறார். இவரது தாயார் இந்த பகுதியில் சீட்டு நடத்தி வருகிறார். இவர்களது வீட்டில் யாரும் தங்குவதில்லை. அருகில் உள்ள பெரிய வீட்டில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்களது பணம் மற்றும் நகைகளை இவர்கள் தங்காமல் உள்ள வீட்டில் வைத்திருந்தனர். முஜிபூர் ரகுமான் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் மோதிரங்கள் மற்றும் செயின்கள் மேலும் ரூ.3 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து முஜிபூர் ரகுமான் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தடயவியல் துறை டிஎஸ்பி சீனியம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ இடம் வந்து கைரேகை சோதனையில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் பற்றிய துப்பு அறிவதற்காக போலீஸ் மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மோப்பநாய் லிண்டா சிறிது தூரம் வரை சென்று நின்றுவிட்டது.இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடிய கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : robberies ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்