காவேரிப்பட்டணம், ஜூன் 13: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதியதாக 6ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் பால்ராஜ், சாந்தி முன்னிலை வகித்தனர். இப்பள்ளியில் தமிழ்வழி கல்வி, ஆங்கிலவழி கல்வி ஆகியவை கற்பிப்பதோடு, இணை செயல்பாடுகளான, தேசிய மாணவர் படை, தேசிய பசுமைப்படை, பாரத சாரணர் சங்கம், நாட்டு நலப்பணிதிட்டம், அறிவியல் மன்றம், ஓவியப்பயிற்சி, பேச்சு, கட்டுரைப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி போன்றவை சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது.
இவற்றில் ஆண்டுதோறும் மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர் என ஆசிரியர்கள் கூறினர். பெண்ணார் கால்பந்து குழு தலைவர் சத்தியமூர்த்தி, 4 வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டி கொடுத்தார். அவருக்கும், செயலர் சசிகுமாருக்கும் பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு, இனிப்பு வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் சரவணன் வரவேற்றார். நல்லாசிரியர் பவுன்ராஜ் நன்றி கூறினார்.