×

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் ₹6 ஆயிரம் நிதியுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி, ஜூன் 13: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில், ₹6 ஆயிரம் பெற விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம், கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ₹6 ஆயிரம் நிதி உதவியானது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ₹2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இத்திட்டம், தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும், இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசு தாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து, வரும் 30ம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும். தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தி மூலமாகவும் விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Dharmapuri ,district farmers ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்