கும்பகோணம், ஜூன் 13: கும்பகோணம் அருகே ஜனசதாப்தி ரயில் பெட்டியில் புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு ஜனசதாப்தி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம்போல் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயில் ஆடுதுறை வழியாக கும்பகோணம் நோக்கி சென்றது.ஆடுதுறை ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது ரயில் பெட்டி பகுதியிலிருந்து புகை மளமளவென வெளியேறியது. இதையறிந்து உடனடியாக சிவப்பு சிக்னல் போடப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது.இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் புகை வருவதை பார்த்து ரயிலை விட்டு பயணிகள் கீழே இறங்கி ஓடினர்.
இதையடுத்து ரயில் பெட்டிகளில் ரயில் கார்டு ஜேம்ஸ் அமல்நாதன் மற்றும் ஆடுதுறை ரயில்வே நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் சீனிவாசன் மற்றும் ரயில் டிரைவர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது D5 பெட்டியின் கீழ் பகுதியில் உள்ள பிரேக்குகள் இறுகி கருகி புகை வெளிவந்தது தெரியவந்தது. உடனடியாக அது சரி செய்யப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து 20 நிமிட கால தாமதமாக ரயில், ஆடுதுறையிலிருந்து கும்பகோணம் நோக்கி புறப்பட்டது.