விராலிமலை, ஜூன் 13: விராலிமலையில் நடைபெற்ற ஜமாபந்தியின் நிறைவு நாளான குடிகள் கூட்டத்தில் 23 பயனாளிகளுக்கு ரூ.7.74 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விராலிமலை தாலுகாவில் ஜமாபந்நி கொடும்பாளூர், நீர்பழனி மற்றும் விராலிமலை ஆகிய 3 உள்வட்டங்களுக்கு கடந்த 6ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துனை கலெக்டர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஜமாபந்நியில் நீர்பழனி, கொடும்பாளுர், விராலிமலை ஆகி உள்வட்டங்களிலிருந்து 193 மனுக்கள் பெறப்பட்டு அதில் 23 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
அதனை தொடர்ந்து நிறைவு நாளான நேற்று குடிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா உள்ளிட்ட ரூ.7 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துனை கலெக்டர் கிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் விராலிமலை தாசில்தார் சதீஸ்சரவணகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ராஜேஸ்வரி, தலைமையிடத்து துணை தாசில்தார் சேக்அப்துல்லா, தலைமை நில அளவர், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓவினர், அலுவலக பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.