புதுக்கோட்டை, ஜூன் 13: புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கட்டுமானத் தொழில் அமைப்புசாரா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்க சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே இதுதொடர்பான முகாம் இன்று (13ம்தேதி) புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் கல் உடைப்பவர் அல்லது கல் வெட்டுபவர், கொத்தனார், பெயிண்டர், வார்னிஷ் பூசுபவர், கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர், எலக்ட்ரிஷியன், மெக்கானிக், வெல்டர், தலைமை கூலியாள், கிணற்றில் தூர் எடுப்பவர், கூரை வேய்பவர், மேஸ்திரி, மிக்ஸர் டிரைவர், மொசைக் பாலீஸ் செய்பவர், கட்டுமானப் பணி தொடர்பான மண் வேலை செய்பவர், பந்தல் கட்டுமானம் உள்ளிட்ட 53 வகையான கட்டுமான தொழில்களிலும் மற்றும் சுமை ஏற்றுதல், இறக்குதல், சாயத்தொழில், உணவு சமைத்தல், உணவு நிறுவனங்களில் பணிபுரிதல், முந்திரி தொழில், ஆட்டோ, டாக்சி, வேன், டெம்போ, லாரி, பேருந்து ஓட்டுதல், மண்பாண்டத் தொழில், முடிதிருத்துதல் தொழில், அனைத்து தெரு வியாபாரங்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிதல், தையல் தொழில், ஓவியர்கள், வீடியோ புகைப்படங்கள் எடுத்தல் மற்றும் ஒலி ஒளி அமைத்தல் போன்ற 60 வகையான அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இந்த முகாமை பயன்படுத்தி புதிய உறுப்பினரர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.அவ்வாறு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து மரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம், மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், 3 பாஸ்போட் அளவு போட்டோ உள்ளிட்ட ஆவணங்களின் நகல் மற்றும் அசலுடன் கொண்டுவர வேண்டும்.மேலும் வயது சான்றுக்கான ஆவணமாக பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்று நகல் ஆகியவை இருப்பின் எடுத்துவர வேண்டும் என்று அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.