×

பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர ஜூன் 20 வரை விண்ணப்பம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 13: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சேர்ந்து பயில மாணவ, மாணவிகளிடம் இருந்து வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு 20 பள்ளி விடுதிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ ஆகியவைக்கு 8 விடுதிகளும் செயல்படுகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படுகிறது. 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகிறது. விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாவன, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிமீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்காக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இச்சலுகைகளை பெற்று பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : School ,polytechnic student ,hostels ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி