×

அம்பத்தூர் பழைய நகராட்சி சாலையில் ஷேர் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு

அம்பத்தூர், ஜூன் 13: அம்பத்தூர், பழைய நகராட்சி சாலையை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அம்பத்தூர், பழைய நகராட்சி சாலையில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், பூங்கா, வங்கிகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. இந்த சாலை சிடிஎச் சாலை, செங்குன்றம் நெடுஞ்சாலை இணைக்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி பொதுமக்கள், நோயாளிகள், மாணவர்கள், வியாபாரிகள் என தரப்பினரும் சென்று வருகின்றனர். மேலும் இங்குள்ள பூங்காவிற்கு தினமும் காலை, மாலை வேளைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்த சாலையில் 3 வங்கிகள் இருப்பதால் தினமும் 300க்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த சாலையின் ஒருபுறத்தை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி எப்போதும் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் மறுபுறத்தில் கார், வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். இதனால் சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தும் அடிக்கடி தடைபடும்.

இதோடு மட்டுமில்லாமல் இந்த சாலையின் முன் பகுதியான சிடிஎச் சாலை பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக பொதுமக்கள், நோயாளிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், பூங்காவிற்கு வாக்கிங் வரும் முதியோர்கள், விளையாட வரும் சிறுவர்கள் உள்ளிட்டோர்களும் சாலையில் செல்ல முடிவதில்லை. மேலும், சாலையில் இடையூறாக நிறுத்தி வைத்திருக்கும் ஷேர் ஆட்டோக்காரர்களிடம் மற்ற வாகன ஓட்டிகள் தட்டிக்கேட்டால் மிகவும் அவதூறான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரிடம் கூறினால் கண்டுகொள்வதில்லை. இதனால் தினமும் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில்தான் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அம்பத்தூர் பழைய நகராட்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி உள்ள டிரைவர்கள் மீது போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : road ,Ambattur ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...