×

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

திருவள்ளூர், ஜூன் 13: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 17ம் தேதி முதல் நடைபெற உள்ளது என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதோடு, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கு தேவையான பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் உள்ளன.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையத்தின் மூலமாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு, 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு, வரும், 14 முதல் அடுத்த மாதம் 14 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடக்கிறது.

தற்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்- 4 தேர்வுக்கு, இலவசப் பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வரும் 17ம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள உள்ளவர்கள்  வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 044 27660250 தொடர்புகொண்டு, இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

Tags : Tienpiesci Group ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...