×

தொழிலதிபரை கடத்த திட்டம் ரவுடி உள்பட 5 பேர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு கேஎம் கார்டனை சேர்ந்தவர் நவீன் குமார் (35). ஏசி மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு சிவராஜ் சாலை வழியாக வீட்டிற்கு வந்தபோது ஒரு கார் இவரை  உரசிவிட்டு சென்றது. இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி நவீன்குமாரை கொலை செய்து விடுவதாக கூறி ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டனர். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் உன்னை வெட்டுவோம் என்று கூறிவிட்டு சென்றனர். இதுகுறித்து நவீன்குமார் அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு ஆய்வாளர் ரவி வழக்குப்பதிவு செய்து கன்னிகாபுரம் விளையாட்டு திடல் பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜங்கிலி கணேஷ் (34), வியாசர்பாடியை சேர்ந்த சூர்யா (24), சூளையை சேர்ந்த குமார் (40), செந்தில் (43), கொளத்தூரை சேர்ந்த பாலமுருகன் (35) என்பதும், குடியாத்தத்தை சேர்ந்த தொழிலதிபர் பத்மநாபன் என்பவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது. எனவே போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு வைத்திருந்த கார், 3 கத்திகள், 5 செல்போன்கள் ரூ.10 ஆயிரம்  பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,businessman ,Rowdy ,
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது