குளத்தூர், ஜூன் 13: தருவைகுளத்தில் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். குளத்தூரை அடுத்த தருவைகுளம் நீக்கோலாசியார் தெருவை சேர்ந்தவர் மரியதங்கையா மகன் அந்தோணிஜெயராஜ்(38). இவருக்கும், 125வீட்டு காலனி தெருவை சேர்ந்த தொம்மைஅந்தோணிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தகராறு நடந்தது. இதில் தொம்மை அந்தோணி கொலைசெய்யப்பட்ட வழக்கில் அந்தோணிஜெயராஜ் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தொம்மைஅந்தோணியின் உறவினர்கள் தருவைகுளம் சூசைமரியான் நகரை சேர்ந்த தாசன் மகன் குட்டி என்ற ஜேசுஅந்தோணி (29), 40வீடு காலனி பகுதியை சேர்ந்த ராயப்பன் மகன் சுதாகர்(30), வெள்ளப்பட்டியை சேர்ந்த கடற்கரைஆண்டி மகன் பவுல்ராஜ்(30) ஆகியோர் அந்தோணிஜெயராஜ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தருவைகுளம் போலீசில் அந்தோணிஜெயராஜ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராமலட்சுமி வழக்கு பதிந்து குட்டி என்ற ஜேசுஅந்தோணி, சுதாகர், பவுல்ராஜ் ஆகியோரை கைது செய்தார். விசாரணைக்கு பிறகு 3 பேரும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.