திண்டுக்கல், ஜூன் 12: தமிழகத்திற்கு கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்து குறைந்ததால், மூட்டைக்கு ரூ.500 விலை அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய பிராண்டுகள் பெயரில் போலியான தரமற்ற அரிசி கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு, பருவமழை ஏமாற்றியதால் இந்தாண்டு நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய கர்நாடகா, ஆந்திராவிலிருந்து தினமும் 70 சதவீதம் அரிசி விற்பனைக்கு வருகிறது. தற்போது கர்நாடகா, ஆந்திராவிலும் மழையின்மையால் நெல் சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலங்களிலும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு விற்பனைக்கு வரும் அரிசி வரத்து வேகமாக குறைந்து வருகிறது. அரிசி ஆலைகளில் நெல் இருப்பும், இல்லாததால் விலை அதிகரித்து
வருகிறது. கடந்த வாரம் கார்நாடக ராஜபோகம் அரிசி (100 கிலோ மூட்டை) ரூ.4 ஆயிரத்துக்கு விற்றது. நேற்று மூட்டைக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விலை அதிகரித்து ஒரு மூட்டை (100 கிலோ) ரூ.4,500க்கு விற்றது. இதேபோல் டீலக்ஸ் உள்ளிட்ட ரகங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்க தலைவர் கிருபாகரன் கூறியதாவது: அரிசி தட்டுப்பாட்டால், திண்டுக்கல்லுக்கு வழக்கத்தை விட 200 டன் குறைவாக வருகிறது. அரிசி ஆலைகளில் நெல் இருபபு இல்லாததால் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல் சோளம், கேப்பை, கம்பு உள்ளிட்ட தானியங்களின் விலையும் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது, என்றார்.