கொடைக்கானல், ஜூன் 12:கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உப கோவில் தான் இந்த பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள முருகன் சிலையை செய்த போகர் தான் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் உள்ள முருகன் சிலையை செய்துள்ளார். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் வருடாபிஷேகம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது.
பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் கடந்த 2014ம் ஆண்டு வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இதே மாதத்தில் இந்த கோயிலில் வருடாபிஷேகம் நடைபெறும். ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் குருக்கள் செல்வசுப்பிரமணி தலைமையில் புனித கலச நீரின் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீரின் கலசம் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு குழந்தை வேலப்பருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதுடன், 16 வகை அபிஷேகங்கள் குழந்தை வேலப்பருக்கு நடைபெற்றது. இந்த வருட அபிஷேகத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் அரண் காவல்துறை அதிகாரிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.