ராசிபுரம், ஜூன் 12: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 5 பேரை மீட்ட சமூக ஆர்வலர்கள், அரசு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராசிபுரம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். இவ்வாறாக சுற்றித்திரிபவர்களை உயர்த்துளி அமைப்பினர் மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ராசிபுரத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 5 பேரை மீட்ட அமைப்பினர், காவல்துறையினர் உதவியுடன் அரசு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக அவர்களை குளிக்க வைத்து, புது ஆடைகளை அணிவித்து மையத்தில் சேர்த்துள்ளனர். மேலும், ராசிபுரம் ரயில் நிலையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த விஜய்(35) என்ற இளைஞரை மீட்ட, உயிர்த்துளி அமைப்பின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா, அந்த இளைஞரை காவல்துறையினர் உதவியுடன் காப்பகத்தில் ஒப்படைத்தார்.