திருச்செங்கோடு, ஜூன் 12: திருச்செங்கோடு தாலுகா பெரிய மணலியில் கரிய காளியம்மன் கோயில் அருகே மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் சிதிலமடைந்ததால், பாதுகாப்பு கருதி ஜேடர்பாளையம் சாலையில் அஞ்சல் அலுவலக கட்டிடம் அருகே உள்ள கட்டிடத்துக்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை நாமக்கல் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்தானம் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். கோக்கலை, இளையம்பாளையம், கே.கே.பாளையம், தொண்டிப்பட்டி, பெரும்பாளிப்பட்டி, பெருமாகவுண்டம்பாளையம், முசிறி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் மின்சாரம் சம்பந்தமான வேலைகளுக்கு, ஜேடர்பாளையம் சாலையில் உள்ள புதிய மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.