×

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2019-20ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை (வாய்ப்பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேரப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இதில் சேரலாம். பயிற்சி காலை 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத்துறையால் தேர்வு நடத்தப்பட்டு, அரசு தேர்வுகள் இயக்குநரால் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ₹120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு நகரப் பேருந்தில் இலவச பேருந்து பயணச் சலுகை உண்டு. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ₹400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள, மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு எதிரில், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags : Government College ,Krishnagiri District ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்