திருச்சி, ஜூன் 12: திருச்சி மாநகரில் ரூ.71.50 லட்சத்தில் வெள்ளி விழா பூங்கா அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சி 1994ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. 24 ஆண்டுகள் கடந்து ஜூன் 1ம் தேதியுடன் 25ம் ஆண்டு துவங்கியது. இதனை கருத்தில்கொண்டு மாநகராட்சி சார்பில் நினைவு பூங்கா அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பொன்மலை கோட்டத்தில் உள்ள நியூ ராஜா காலனியில் ரூ.71.50 லட்சம் மதிப்பீட்டில் 9,600 சதுர அடி பரப்பளவில் வெள்ளி விழா நினைவு பூங்கா அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது அங்கு தியான மையம், நீரூற்று, சிறுவர்களுக்கான சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது. அதே போல் ராணுவ பீரங்கிகள், செயற்கை புல்தரைகள், நடைபாதைகள் அமைக்கும் பணியும் முழுவீச்சாக நடந்து வருகிறது. மேலும் பூஞ்செடிகளும் அமைக்கப்படுகிறது. விரையில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.