×

கான்ட்ராக்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்: மக்கள் மறியல்

மணப்பாறை, ஜூன் 12: மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம் உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை நேற்று தேனூர் கிராமத்தை சேர்ந்த கான்ட்ராக்டர் அசோக்குமார் (31) என்பவர் தனது பைக் மூலம் கடக்க முயன்றார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் அசோக்குமார் மீது மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தினை நேரில் பார்த்த அப்பகுதியினர் காரை வழிமறித்து நிறுத்த முயன்றபோது, கார் அதிவேகமாக நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து, சிலர் தங்களது பைக்குகளில் காரை விரட்டி சென்றதையடுத்து மேனி வயல் என்ற இடத்தில், காரை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதற்கிடையே, நிறுத்தாமல் சென்ற காரில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாரும் , துவரங்குறிச்சி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED தொட்டியம் அருகே நாகையநல்லூரில் சீதாராமன் திருக்கல்யாண உற்சவம்