×

சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை வெளியூர் பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் திருவாரூர் ஆழித்தேர் கண்ணாடி கூண்டால் மூடப்படுமா?

திருவாரூர், ஜூன் 12: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரினை வெளியூர் பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் கண்ணாடி கூண்டு கொண்டு உடனடியாக மூடவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.

கோயில் 5 வேலி,குளம் 5 வேலி,ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய 2வது தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சாதாரணமாக 30 அடி அகலமும் , 30 அடி உயரமும், 220 டன் எடையும் கொண்ட இந்த ஆழித்தேரானது தேரோட்டத்தின் போது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு மொத்தம் 300 டன் எடையுடன் நகரின் 4 வீதிகளிலும் ஆடியசைந்து வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

அதன்படி கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தேரோட்டத்திற்காக ஆழித்தேரின் மேற்கூரையானது பிரிக்கப்பட்டு பின்னர் மூடப்படும் நிலையில் மற்ற காலங்களில் தேரினையும், தேரில் உள்ள அழகிய வேலைபாடுகள் கொண்ட மரசிற்பங்களையும் பொதுமக்களும், பக்தர்களும் குறிப்பாக வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் ஆழிதேரை முழுமையாக பார்க்கமுடியாத நிலை இருந்து வருவதால் இந்த தேரினை கண்ணாடி கூண்டு கொண்டு மூட வேண்டும் என்றும் அப்போது தான் ஆழித்தேர் முழுமையாக தெரியும் என்றும் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் வைத்த வேண்டுகோளின் படி இந்த ஆழித்தேரின் மேற்கூரை மற்றும் 4 பக்கமும் ரூ 40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிக்கு அரசு மூலம் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணியானது கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. அதன்படி தேரின் 4 பக்கமும் முதலில் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் தேரின் மேல்பாகம் வரையில் இரும்பு பட்டைகள் கொண்டு கூரை அமைக்கும் பணியானது நடைபெற்றது.

இந்நிலையில் நடப்பாண்டில் தேர்தல் மற்றும் கோடை வெப்பம் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் இந்த ஆழித்தேரோட்டமானது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2 மாதம் முன்னதாகவே (கடந்த ஏப்ரல் மாதம் 1 ம் தேதி) நடைபெற்றதன் காரணமாக இந்த கண்ணாடி கூண்டு அமைக்கும் பணியானது பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தேரோட்டம் நடைபெற்று முடிந்து சுமார் 70 நாட்கள் ஆகும் நிலையில் இந்த தேரானது பழைய நிலையே போன்று தகரம் கொண்டு மூடப்பட்டுள்ளது. எனவே பல்வேறு வேலை பாடுகள் கொண்ட மர சிற்பங்களுடன் காட்சியளித்து வரும் இந்த தேரினை வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் கண்ணாடி கூண்டு அமைப்பதற்கான பணியினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : devotees ,children ,firms ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...