×

தோகைமலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாப பலி

தோகைமலை, ஜூன் 12: தோகைமலை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் இறந்தார். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புத்தூர் ஊராட்சியில் உள்ள சின்னபுத்தூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரது மனைவி முத்துலட்சுமி(40). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக முத்துலட்சுமி தனது மகன் புகழேந்தியுடன் பைக்கில் சென்றார். அப்போது ஆர்ச்சம்பட்டி புத்தூர் ரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது நிலைதடுமாறிய முத்துலட்சுமி பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்துலட்சுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து இறந்துபோன முத்துலட்சுமியின் மகன் புகழேந்தி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மரம் விழுந்து வாலிபர் படுகாயம்: கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் போத்துராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி என்பவரது மகன் காமராஜ்(37). நேற்று முன்தினம் காமராஜ் தனது நண்பரான ஆறுமுகத்துடன் வெள்ளபட்டிக்கு பைக்கில் சென்றுள்ளார். இரும்பூதிபட்டி பஞ்சப்பட்டி ரோட்டில் வடுகபட்டியில் உள்ள கண்ணதாசன் என்பவரது வீட்டின் அருகே சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த லெட்சுமி (70) மற்றும் ஒருவரும் சேர்ந்து வாத மரத்தை வெட்டிக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது எதிர்பாராத நிலையில் ரோட்டில் சென்ற காமராஜின் பைக் மீது வாத மரம் விழுந்து உள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காமராஜ் மயங்கி கீழே விழுந்து உள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கை மற்றும் கால் உறுப்புகள் செயல் இழந்து ஆபத்தான நிலையில் காமராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பைக்கில் காமராஜுடன் சென்ற ஆறுமுகம் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் லெட்சுமி மற்றும் மரம் வெட்டிய தொழிலாளி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Kayamkalai ,victim ,
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி