×

கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வேளாண்மை, தோட்ட கலைத்துறை திட்ட பணிகள்

கரூர், ஜூன் 12: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா, சித்தலவாய், திருக்காம்புலியூர், கம்மாநல்லூர், மேட்டு மகாதானபுரம் மற்றும் சிந்தலவாடி பகுதியில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு கூட்டு பண்ணையத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் விவசாயத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்கவும், பந்தல் அமைத்து காய்கள் மகசூல் செய்யவும் அரசு மானியம் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் புடலை, பாவை, பீர்க்கங்காய்கள் பந்தல் மூலமாகவும், கரும்பு நுண்ணீர் பாசனத்திட்டம் மூலமாகவும் மகசூல் செய்யப்பட்டு வருகிறது.

தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக அரசு நுண்ணீர் பாசனத்திட்டம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளையும், வேளாண் கருவிகள் இடு பொருட்களையும் வழங்கி வருகிறது.
கூட்டு பண்ணைய திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த விவசாயம் செய்தால் நல்ல லாபகரமான தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள இயலும் என்ற அடிப்படையில் 20 நபர்கள் கொண்ட விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு அதில் 5 குழுக்களை இணைத்து 100 நபர்களை கொண்ட விவசாய உற்பத்தியாளர் குழு அமைக்கப்படுகிறது.

இவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்டுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு விவசாயத்தை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இக்குழுக்களை 1000 நபர்களை கொண்ட குழுக்களாக இணைத்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் என்று அமைக்கப்பட்டு ரூ. 15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளும், இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இக்குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமையடிப்படையில் வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படும். குழுக்களில் இல்லாத விவசாயிகளுக்கும் இந்த கூட்டு பண்ணையத்திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக முதன்மை செயல் அலுவலர் ஒருவர் மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் 7 முதல் 10 வரை குழுக்களை இணைத்து ஏற்றுமதி செய்யக்கூடிய மதிப்புக் கூட்டு விவசாய பொருட்களை உற்பத்தி செய்திடவும், ஏற்றுமதி செய்திடவும் அரசு நிதியுதவி வழங்குகிறது. கரூர் மாவட்டத்தில் 56 கூட்டு பண்ணைய குழுக்களுக்கு 2017- 18ம் ஆண்டில் ரூ. 1.20 லட்சம் மதிப்பிலும், 2018- 19ம் ஆண்டில் ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களில் இது போன்ற குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தண்ணீர் இல்லாத இந்த சூழ்நிலையிலும் சொட்டு நீர் பாசனம் மிக நன்மை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. சொட்டு நீர் பாசனம், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள், மழைநீர் சேகரிக்கும் இடங்கள் என இது தொடர்பான திட்டங்களை மாநிலம் முழுதும் செயல்பட்டு வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மண் வளத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரிசோதனை செய்து அதற்கேற்றாற்போல விவசாயம் செய்ய வேண்டும். அத்துடன் விதை தேர்வு என்பதும் மிக முக்கியம், சந்தையில் வாங்கி வந்து விதைகளை விதைக்காமல் வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படும் தரமான விதைகளை விதைக்க வேண்டும். விளைப் பொருட்களை சந்தைப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அதற்காக உழவன் செயலியை கைபேசி மூலம் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு பொருளையும் அப்படியே விற்காமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முன்வர வேண்டும். அதிக மதிப்புள்ள வாசனை பயிர்கள் உள்ளிட்டவைகளை வளர்க்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணைய திட்டத்தின் மூலம் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் 1.40 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை பரிசோதனை செய்து வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின்கீழ் விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பண்ணை குட்டை, தடுப்பணை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. வரும்காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எந்த இடத்தில் தடுப்பணைகள் அமைத்தால் நிலத்தடி நீர் பெருகும் என்பதை ஆய்வு செய்து அதனடிப்படையில் அமைக்கப்படவுள்ளது. சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்க அரசின் மானியத்தை பெற முன்வர வேண்டும் என்றார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன்ராம், உதவி இயக்குநர் தங்கவேல், வேளாண்மை துணை இயக்குநர் கந்தசாமி, வேளாண் அலுவலர் மணிமேகலை உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Krishnarayapuram Taluk ,
× RELATED திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில்...