×

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன் 12: பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்காக பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு 46, மாணவிகளுக்கு 19 விடுதிகள் உள்ளன. இதேபோல கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகள் மாணவர்களுக்கு 5ம், மாணவிகளுக்கு 4ம் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவர், மாணவிகள் சேரலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ, இணை இயக்குனர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது இனம் மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BMC ,
× RELATED கிருஷ்ணகிரியில் பாஜக நிர்வாகி பாமக நிர்வாகி மீது தாக்குதல்