நாகை, ஜூன் 12: நாகை மாவட்ட தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நாகை அருகே கருவேலங்கடை தூய மைக்கேல் அகாடமியில் நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு அலுவலர்கள் தூய மைக்கேல் அகாடமி பள்ளிக்கு வந்தனர். அங்கு மாணவ, மாணவிகள் முன்னிலையில் தீ பிடிப்பதற்கான காரணிகள், தீப்பிடித்தால் அதை விரைந்து அணைப்பதற்கான வழிமுறைகள்.
வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்தும்போது திடீரென தீப்பிடித்தால் அதை எவ்வாறு அணைப்பது. தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது. உயரமான கட்டிடத்தில் தீப்பிடித்தால் அந்த தீயை எவ்வாறு அணைப்பது. அங்கு சிக்கியுள்ளவர்களை பத்திரமாக எவ்வாறு மீட்பது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். அரசு போக்குவரத்துக்கழக நாகை கோட்ட மேலாளர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.