திருவள்ளூர், ஜூன் 12: திருவள்ளூரில் உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில் ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அலுவலரை ஓட்டல் உரிமையாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் உணவு மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள முனியாண்டி அசைவ ஓட்டலில், உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும், சமைக்கப்படும் கோழி, ஆடு ஆகிய கறியும் தரமில்லாத வகையில் இருப்பதாகவும், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்திக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் நேற்று பிற்பகல் ஓட்டலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த ஓட்டல் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம், ‘’தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மாற்றம் செய்கிறீர்களா’’’’ அதிகாரி சுந்தரமூர்த்தி விசாரித்தார். அப்போது ‘’உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா என வாக்குவாதம் செய்து உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தியை ஓட்டர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர், உயரதிகாரிகளுக்கும், திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து வந்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசாரின் பாதுகாப்போடு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அங்கு விற்பனைக்காக வைத்திருந்த ஆட்டிறைச்சி, கோழிக்கறி மற்றும் மீன் வகை மாதிரிகளை தனித்தனியாக கன்டைனரில் வைத்து பார்சல் செய்து ஆய்வுக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ‘’உணவு மாதிரிகள் ஆய்வுக்கு பிறகு அதில் உள்ள கலப்படம் குறித்து தெரியவரும். மேலும், ஆய்வுக்கு வந்த என்னை, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து தாக்கியது குறித்து, போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளேன்’’ என்றார்.