×

விதி மீறி தொழிலாளர்களை ஏற்றும் தனியார் தொழிற்சாலை வாகனங்கள்

திருவள்ளூர், ஜூன் 12: அதிகளவு தொழிலாளர்களை விதிமீறி ஏற்றிச் செல்லும் தனியார் வேன்களின் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ, திருமழிசை சிட்கோ மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில், மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை, ஷிப்ட் முறையில் பணிக்கு அழைத்துச் சென்று, மீண்டும் கொண்டுவந்து விட, தொழிற்சாலை நிர்வாகம் தனியார் வேன்களை குத்தகை அடிப்படையில் பெறுகின்றனர். இதில், ஒரு வேனில் அதிகபட்சம் டிரைவர் உட்பட 13 பேர் வரை பயணிக்கலாம்.

ஆனால், ஒரு வேனில் குறைந்தது 30 பேர் வரை ஏற்றிச் செல்கின்றனர். இதில், பலர் படியில் உட்கார்ந்தபடியும், உள்ளே நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர்களும் படியில் நின்றபடி உயிரை கையில் பிடித்து பயணிக்கும் அவலம் உள்ளது.
இதனால், வேன் நிலைதடுமாறி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பல விபத்துகள் நடந்தும், விதியை மீறி அதிகளவு ஆட்களை ஏற்றச் செல்லும் வேன்கள் மீது போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, விபத்துகளை தவிர்க்க, திருவள்ளூர் வழியாக அதிகளவு ஆட்களை ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்