திருத்தணி, ஜூன் 12: திருத்தணி முருகன் கோயில் கோபுரத்தில் சேதமடைந்த கலசத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர். இக்கோயிலில் கருவறை கோபுரம், வள்ளி - தெய்வானை கோபுரம், கிழக்கு, மேற்கு, வடக்கு கோபுரம் மற்றும் காளி கோபுரம் ஆகியவை உள்ளன.
இதேபோல் முருகன் கோயில் கருவறை கோபுரம் தங்கத்தால் ஆனது. மேலும் கோயிலின் முன்புறத்தில் உள்ள சிறிய கோபுரத்தில் மூன்று கலசத்தில் ஒரு கலசம் கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து முருக பக்தர்கள் பலமுறை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் விரக்தியுடன் வந்து செல்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக சேதமான கலசத்தை பூஜை செய்து சீரமைக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.