×

அடப்பாவமே, வற்றாத கூவம் ஏரியும் வறண்டு போனது

திருவள்ளூர், ஜூன் 12: திருவள்ளூர் அருகே உள்ள கூவம் ஏரியானது, அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக நீர்வரத்து கால்வாய் மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாய்களை தூர்வாராததால் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின்கீழ், 1,945 ஏரிகள் உள்ளன. 1,895 குளங்களும் உள்ளன. மேலும், 25,658 கிணறுகள் உள்ளன. பொதுப்பணித்துறை ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 8,455 ஹெக்டேர் நிலங்களும், ஒன்றிய ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 4,676 ஹெக்டேர் நிலங்களும் உள்ளன. இந்த ஏரிகளுக்கு  நீர்வரத்து கால்வாயில் முள் செடிகள் மற்றும் பாலிதீன் கவர்கள் கொட்டி கிடப்பதால் மழை நீர் ஏரிக்கு வர வழியில்லாத நிலை உள்ளது. இம்மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பதிவாகியும், தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

மாதம்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நீர்வரத்து கால்வாய்களை சீர் செய்யுங்கள் என உரத்த குரலில் விவசாயிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்கு அதிகாரிகளும் சரி செய்து விடுவோம், நிதி கிடைக்க வில்லை, வந்ததும் தூர் வாரப்படும் என சம்பிரதாயத்திற்காக பதில் கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். விளைவு மழையின்போது அதன் நீரானது ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்வதில்லை. ஆங்காங்கே தேங்கி வீணாகிறது. மழைக் காலங்களில் நீரை சேமிக்க தவறுவதால் நிலத்தடிநீர் குறைந்து கடும் வறட்சியை சந்திக்கும் நிலை தொடர்கிறது. இந்த நிலத்தடிநீரை நம்பி, ஒரு லட்சத்து 72,499 ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன.

வருணபகவான் கருணை காட்டினாலும், அதிகாரிகள் அலட்சியத்தால் திருவள்ளூர் அருகே கூவம் ஏரி, சேலை ஏரி, ஏகாட்டூர் ஏரி, வெண்மணம்புதூர் ஏரி உட்பட பல ஏரிகளுக்கு நீர்வரத்து வர வாய்ப்பு இல்லாமல் உள்ளது. மேலும், ஏரியில் நீர் நிரம்பினால் உபரிநீர் செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்படாமல் புதர்மண்டி உள்ளது. இதனால், விவசாயம் இல்லாமை, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளே காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.  

Tags : poor ,lake ,
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...