ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 12: ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ் என, டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்கள் வாங்கி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரகடத்தில் பாருடன் கூடிய அரசு டாஸ்மாக் கடை இயங்குகிறது. கடந்த சில நாட்களாக இங்கு வந்த ஒரு வாலிபர், வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் எஸ்ஐ என கூறி, டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்கள், சிகரெட் மற்றும் உணவு பண்டங்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.தொடர்ந்து அவரது தொல்லை அதிகரித்ததால், இங்கு வேலை பார்க்கும், சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த பார் மேலாளர் செல்லதுரை (35), ஓரகடம் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அந்த வாலிபர் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு, அந்த வாலிபர் சிகரெட் பாக்கெட் ேகட்டார். உடனே, அங்கிருந்த பார் ஊழியர்கள், அவரை மடக்கி பிடித்து ஓரகடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், செங்கல்பட்டு தாலுகா, மறைமலைநகர் சட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (32). பல இடங்களில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு, 2 நாட்களுக்கு ஒருமுறை செல்வார். அங்கு தன்னை போலீஸ் எஸ்ஐ என கூறி, மதுபாட்டிகள் மற்றும் மிரட்டி பணம் ஆகியவற்றை பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.